உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர் விடுதி உணவுப்படியை உயர்த்த அண்ணாமலை கோரிக்கை

மாணவர் விடுதி உணவுப்படியை உயர்த்த அண்ணாமலை கோரிக்கை

சென்னை : 'ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உணவுப்படியை மாதம், 1,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில், உணவு தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், வீணாகும் உணவு, கால்நடை பண்ணைகளுக்கு விற்கப் படுவதாகவும், 'தினமலர்'நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சென்னையில் ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு, அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. விடுதி ஊழியர்கள், இந்த உணவை அருகில் உள்ள கால்நடை பண்ணைகளுக்கு விற்று விடுவர் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள, 1,331 ஆதிதிராவிடர் விடுதிகளில், 98,909 பேர் தங்கி படித்து, வருகின்றனர். மாணவர்களுக்கு உணவு செலவாக, 142 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. சராசரியாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு, 39 ரூபாய் மட்டும் உணவுக்கு செலவிடப்படுகிறது. ஆனால், உணவுப்படி ஒரு நாளைக்கு, 50 ரூபாய் வீதம் மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறி வருகின்றனர். இந்த தொகையில், மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்? தரமான உணவும் வழங்கப்படாமல், உண்மையில் எதற்காக இந்த மாணவர் விடுதிகளை அரசு நடத்த வேண்டும்?பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் தி.மு.க., அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்த செலவிடப்படவில்லை; ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது தி.மு.க., அரசு?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாமதிக்காமல் உதவணும்!

அவரது மற்றொரு அறிக்கை:தமிழக அரசு, தாமதிக்காமல், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி துறையினர் இடையே பேச்சுக்கு ஏற்பாடு செய்து, விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டும். அதன் வாயிலாக, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை