அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற மீண்டும் முறையீடு
சென்னை:அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக, 'டாஸ்மாக்' மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை, வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.சென்னை, 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையில் இருந்து விலகியது.இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் இடம் பெற்றிருக்கும் நீதிபதி கே.ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால், இந்த வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என, மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையிலான முதல் அமர்வில் நேற்று முறையீடு செய்தார்.'எங்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்க வேண்டாம். ஏற்கனவே வழக்கை விசாரிக்கும் அமர்வில், இதுகுறித்து முறையீடு செய்யுங்கள். அந்த அமர்வு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்' என, தலைமை நீதிபதி தெரிவித்தார்.