| ADDED : டிச 17, 2025 06:32 AM
விருத்தாசலம்: தி.மு.க., நிர்வாகியை தாக்கிய விவகாரத்தில், சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 44. பெட்ரோல் பங்க் உரிமையாளரான இவர், தி.மு.க., கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார். இவர், டிச., 14ம் தேதி இரவு 7:15 மணியளவில், விருத்தாசலத்தில் நடந்த அரசு பணியாளர் சங்க மாநாட்டில் பங்கேற்ற நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரை மறித்ததாக கூறி, அக்கட்சியினரால் தாக்கப்பட்டார். இதுகுறித்து, விருத்தாசலம் போலீசில் அளித்த புகாரின்படி, சீமான் உள்ளிட்ட 16 பேர் மீது, நான்கு பிரிவு களில் வழக்கு பதிந்துள்ளனர். அதேபோல், நா.த.க., மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் புகாரின்படி, ரங்கநாதன் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.