எலி காய்ச்சலால் சிறுவன் பலி; பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு:ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பருவாச்சி அருகே காட்டூரைச் சேர்ந்த பெரியசாமி - நிர்மலா தம்பதியின் இரண்டாவது மகன் தினேஷ்குமார், 13, எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம், 16ல் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. 19ம் தேதி, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கடந்த, 28ல் எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அதற்கான சிகிச்சை வழங்கிய நிலையில், 29ல் சிறுவன் உயிரிழந்தான்.இதையடுத்து, காட்டூர் மட்டுமின்றி, பக்கத்து கிராமங்களிலும் மருத்துவ ஊழியர்கள் முகாமிட்டு, வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் குறித்து பரிசோதனை செய்கின்றனர். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த ரதி, 36, என்ற பெண்ணுக்கும் எலி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டதால், ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்கு அனுமதித்தனர். எனினும், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.நேரடியாக பரவாது
எலி காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து நேரடியாக பரவாது. இந்த காய்ச்சல் எலியிடம் இருந்து, மனிதர்களுக்கு நேரடியாக பரவாது. எலியின் எச்சம், சிறுநீர், கழிவை மனிதர்கள் மிதிக்கும் போது, மனிதர்களின் காலில் வெடிப்பு, காயம் போன்ற துவாரம் வழியாக உடலில் பரவும். அதுவும், மிகவும் எதிர்ப்புத்தன்மை குறைவாக உள்ள நபர்களை மட்டுமே தாக்கும்.