பல்கலை பணி நியமனம் எதிராக வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கச் செயலாளர் நாகூர்கனி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை அண்ணா பல்கலையில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்ப 2020 செப்.,30 ல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் இட ஒதுக்கீடு, விதிமுறைகளை பின்பற்றவில்லை. அறிவிப்பு சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும். மத்திய கல்வி நிறுவனங்களுக்கான சட்டம், இட ஒதுக்கீடு அடிப்படையில் புதிதாக அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெற்று நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இது பணியாளர்கள் நியமனம் சம்பந்தப்பட்ட வழக்கு. பொதுநல வழக்காக கருத முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டது.