மேலும் செய்திகள்
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
11 hour(s) ago
கோவை: அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, இன்று (அக் 09) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பாலத்துக்கு கோவையின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவை, உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரை யிலான, 16 கி.மீ., கொண்ட அவிநாசி சாலை, இந்நகரின் மத்திய ரேகையாக உள்ளது. இந்த சாலையில் நகரின் முக்கிய பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனை, விமானநிலையம் அமைந்துள்ளன. போக்கு வரத்து நெரிசலை குறைக்க, அ.தி.மு.க. ஆட்சியில், அவிநாசி சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2016 ஆக., 4ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டு, 2020மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. 2021ல் ஆட்சி மாறியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், கூடுதல் தேவைகள் திட்டமிடப்பட்டு, பாலத்தின் மதிப்பீடு ரூ.1791.23 கோடியாக அதிகரிக்கப்பட்டது.தற்போது பாலத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தது. மேம்பாலத்துக்கு, ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று (அக் 09), கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பாலத்தின் சிறப்புகள்
* நான்கு வழிப்பாதையான இந்த மேம்பாலத்தில், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில், ஏறு தளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மத்தியில் 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. * மழை நீர் வடிகால் தமிழகத்திலேயே முதன் முறையாக, மழை நீர் சேகரிப்பு அமைப்பு இந்த பாலத்தில் முன்னோடி முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. பாலத்தின் மீது பெய்யும் மழை நீர், குழாய் வழியாக வடிந்து, பாலத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள 220 ஆழ்துளைகள் வாயிலாக நிலத்துக்குள் சென்று விடும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். * பாலம் கட்டுமானத்தில் 1.5 மீ., அகல நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு 13 ஆயிரத்து 560 மீ., நீளத்துக்கு திட்டமிடப்பட்டு, 9115 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது.* தமிழகத்தில், மதுரை ஊமச்சிகுளத்தில் இருந்து நத்தம் வரையிலான 7.5 கி.மீ., நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலமே, இதுநாள் வரை தமிழகத்தின் நீளமான பாலமாக இருந்தது. தற்போது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான 10.1 கி.மீ., நீளமுள்ள அவிநாசி ரோடு மேம்பாலம் தென்மாநிலங்களின் மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை 45 முதல் 50 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், இனி இந்த துாரத்தை 10 நிமிடங்களில் கடந்து விட முடியும்.* மேம்பாலத்தை 306 துாண்கள் தாங்குகின்றன. 30 மீட்டர், 40 மீட்டர் இடைவெளியில் துாண்கள் அமைந்துள்ளன. ஹோப் காலேஜ் ரயில்வே மேம்பால பகுதியில் மட்டும், 52 மீட்டர் இடைவெளி விடப்பட்டு உள்ளது.
11 hour(s) ago