UPDATED : ஜன 15, 2024 06:03 PM | ADDED : ஜன 15, 2024 05:37 PM
மதுரை: காலை 7 மணிக்கு துவங்கிய மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5:15க்கு நிறைவு பெற்றது. இதில் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித், கார் பரிசாக பெற்றார்.பொங்கல் திருநாளில் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஜன.,15) காலை 7 மணிக்கு துவங்கியது. 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகள் அவிழ்க்கப்பட்டன. பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக பல மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வாடிவாசலில் சீறிபாய்ந்த காளைகளை, வீரர்கள் துணிவுடன் அடக்கினர்.போட்டியின் முடிவில், அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. இது குறித்து கார்த்திக் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டு தமிழகத்தில் நடத்த காரணமான அனைவருக்கும் நன்றி. என் உடலில் பல காயங்கள் இருந்தாலும், எனது ஊர் பெருமைப்படும் என்பதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கிறேன்' என்றார். இவர் கடந்தாண்டு நடந்த போட்டியில் 17 காளைகளை அடக்கி பைக் பரிசு பெற்றிருந்தார்.அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் 14 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் 10 காளைகளை அடக்கி 3ம் இடம் பிடித்தார். 2வது இடம் பிடித்த ரஞ்சித், வாய் பகுதியில் காளை முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளரான ஜி.ஆர்.கார்த்திக் என்பவருக்கும் முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டது.