விவசாயிகளுக்கு இழப்பீடு இழுத்தடிப்பது நியாயமல்ல: பா.ஜ.,
சென்னை: 'பல வாரங்களாகியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இழப்பீட்டு தொகையை இன்னும் வழங்காமல், தி.மு.க., அரசு இழுத்தடிப்பது நியாயமல்ல' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: 'டிட்வா' புயலால் பாதிப்படைந்த அனைத்து டெல்டா விவசாயிகளுக்கு, பல வாரங்களாகியும், தி.மு.க., அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. பழுதடைந்த தானிய கிடங்குகளாலும், கொள்முதல் செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தாலும் தான், பல டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப்போயின. தங்களின் பல மாத உழைப்பு பாழாய்ப் போனதை கண்டு கலங்கி நிற்கும் விவசாயிகளுக்கு, நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், நெல் பயிர்களை பார்சலில் கொண்டு வந்து, ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். ஆய்வு செய்து, பல வாரங்களாகியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இழப்பீட்டு தொகையை இன்னும் வழங்காமல், தி.மு.க., அரசு இழுத்தடிப்பது நியாயமல்ல. 'நானும் டெல்டாக்காரன்' என, மேடையில் முழங்குவதை விட, ஏக்கருக்கு, 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கி, விவசாயிகளின் துயரத்தை துடைப்பது தான் சாலச்சிறந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.