| ADDED : ஜன 02, 2024 11:28 PM
பழனி:ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன் தினம், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழனி நகரில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு, நெரிசலால் அலகு குத்தி வந்த பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.பழனி தண்டயுதபாணி கோவிலுக்கு ஆண்டு முழுதுமே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதிலும், விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும்.தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால் பழனியிலும் கூட்டம் அதிகரித்துள்ளது.ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன் தினம், பழனியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். மேலும் தைப்பூச திருவிழாவையொட்டி தற்போதே பாதயாத்திரை பக்தர்களும் வரத் துவங்கி விட்டனர்.பழனி நகர் முழுதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தைப்பூச பாத யாத்திரை பக்தர்கள் பலர் காவடி எடுத்து அலகு குத்தி வந்தனர். சிலர் பறவை காவடி எடுத்து வந்தனர்.கிரி வீதி, அடிவாரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள், வர்த்தக நிறுவனங்களால் அலகு குத்தி வந்த பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். அய்யம்புள்ளி ரோடு, பூங்காரோடு, கிரிவீதியில் வாகனங்களை பக்தர்கள் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பொது கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.