மதுரை மாநகராட்சி முறைகேடு விசாரணைக்கு டி.ஐ.ஜி., நியமனம்
மதுரை:மதுரை மாநகராட்சியில் விதிமீறி சொத்து வரி நிர்ணயம் செய்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்த புகாரை விசாரிக்க, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு, 2023, 2024ல் விதிமீறி சொத்துவரி நிர்ணயம் செய்தது தொடர்பான புகாரில், மாநகராட்சி அதிகாரிகள் பாஸ்வேர்ட்டை முறைகேடாக பயன்படுத்தி வரியை குறைத்தது தெரியவந்தது. இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வினோதினி தலைமையில் விசாரணை நடக்கிறது. இதுவரை மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கணினி ஆப்பரேட்டர்கள் என, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து தி.மு.க., மாநகராட்சி மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில் கலெக்டர்கள் உட்பட 16 பேரை மாநகராட்சி 'சஸ்பெண்ட்' செய்தது. மேலும், 55 பேருக்கு இம்முறைகேட்டில் தொடர்புள்ளதாக போலீசார் பட்டியல் தயாரித்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், மாநில அரசு விசாரித்தால் உண்மை நிலவரம் வெளிவராது; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தர விட்டது. மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க, மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மாநகராட்சி முறைகேடு விசாரணை மேலும் சூடுபிடிக்க உள்ளது.
கலக்கத்தில் கவுன்சிலர்கள்
முறைகேட்டில் ஆவணங்கள் ரீதியாக அதிக எண்ணிக்கையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க, அலுவலர்களுக்கு சிபாரிசு செய்ததன் அடிப்படையில் ஏழு தி.மு.க., கவுன்சிலர்களுக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக ஒரு ஆண், இரு பெண் கவுன்சிலர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளனர். சில கணினி ஆப்பரேட்டர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது முதலில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தும் திட்டம் தனிப்படைக்கு உள்ளது. இதனால் கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.