ஏமாற்றம் அளிக்கும் மாயாஜால பட்ஜெட்: பழனிசாமி
'தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் மாயாஜால பட்ஜெட்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.அவரது அறிக்கை:நடப்பு 2024 - -25ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் போன்றோரை மையமாக வைத்து, 2025- - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.மத்திய பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது, உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த, அடிப்படை சுங்க வரிகளில் சில மாற்றங்கள் போன்றவை வரவேற்கத்தக்கது.பீஹாரில் விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் வைத்து, அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை மத்திய அரசின் பட்ஜெட் என்று கூறுவதை விட, பீஹார் மாநில பட்ஜெட் என, கருதும்படி அமைந்துள்ளது.தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. விவசாய துறையை பொறுத்தவரை, 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உட்பட, சில திட்டங்களை அறிவித்துள்ளனர். இந்த திட்டங்கள் தமிழகத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.தமிழகம் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். விவசாய வளத்தை பெருக்கவும், விரயமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதிநீர் இணைப்பு திட்டங்கள் குறித்தும், எந்த அறிவிப்பும் இல்லை. சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன், புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாதது தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கிறது. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால், இது ஒரு மாயாஜால அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட்டாகவே தோன்றுகிறது. பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு 8 சதவீதம் எப்படி உயர்த்தப்படும் என்பது, ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.