தி.மு.க., போராட்டத்துக்கு அனுமதி பா.ஜ., வழக்கில் அரசுக்கு உத்தரவு
சென்னை:கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்த தி.மு.க.,வினருக்கு அனுமதி வழங்கிய போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை கோரி, பா.ஜ., வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்த மனு:சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இதை கண்டித்து, பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி கோரி போலீசில் முறையாக விண்ணப்பம் செய்யப்பட்டது. கோவையில் அண்ணாமலை, மதுரையில் குஷ்பு, சென்னையில் தமிழிசை தலைமையில் போராட்டம் நடத்த, காவல் துறை அனுமதி மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது.சென்னையில் ஜன., 6 முதல் 21 வரை, 15 நாட்களுக்கு, எந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தக்கூடாது என, காவல் துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜன., 7ல் கவர்னர் ரவியை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினருக்கு எதிராக, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆளும்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் காவல் துறை செயல்படுகிறது. இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமாக உள்ளது.போராட்டங்களுக்கு, ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற, சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு தமிழக அரசு, காவல் துறை தரப்பு, நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தார்.