பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கொண்டு வர, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த, 14 முதல் 17 வரை, நான்கு நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது. சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் தி.மு.க., மத்திய பா.ஜ., அரசுக்கு எதிரான உணர்வை, தமிழக மக்கள் மனதில் விதைக்க முடிவு செய்து, அதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஹிந்தி மொழியை தடை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தி.மு.க., ஆதரவு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி உட்பட பல இடங்களில், ஹிந்தி எழுத்துகள் எழுதிய காகிதங்களை எரிப்பது, பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிப்பது என தி.மு.க., மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள் ஹிந்தி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, பீஹாரில் நடந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் யாத்திரையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற படத்தையும், தி.மு.க.,வினர் ஹிந்தி எழுத்துகளை எரிக்கும் படத்தையும் பகிர்ந்திருந்தார். காங்., தோல்வி 'டெங்கு, மலேரியா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என, துணை முதல்வர் உதயநிதி, கடந்த 2023 செப்டம்பர் 1ம் தேதி பேசினார். இது, தமிழகத்தையும் தாண்டி நாடு முழுதும் சர்ச்சையானது. இதை பா.ஜ., தேசிய அளவில் பிரசாரம் செய்தது. அதைத் தொடர்ந்து, 2023 இறுதியில் நடந்த ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் தோல்வி அடைந்தது. வெற்றியடையும் நிலையில் இருந்த காங்., மூன்று மாநிலங்களிலும் திடீரென பின் தங்கியதற்கு, உதயநிதியின் சனாதனப் பேச்சே காரணம் என, காங்கிரஸ் கட்சியினர் வருத்தத்துடன் விமர்சித்தனர். வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில், பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், காங்கிரசின் முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க., ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்தால், அது பா.ஜ., பிரசாரத்திற்கு உதவும். காங்கிரஸ் -- ஆர்.ஜே.டி., கூட்டணியை தோற்கடித்து விடும் என, காங்கிரஸ் கட்சியினருக்கு அச்சம் ஏற்பட்டது. தி.மு.க., விளக்கம் அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால், 'ஹிந்திக்கு எதிராக எந்த சட்டமும் கொண்டு வர வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில், தமிழகத்தில் பீஹார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி, காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதை, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதைத் தொடர்ந்தே, 'ஹிந்திக்கு எதிராக சட்ட மசோதா கொண்டு வரும் திட்டம் கைவிடப்பட்டு, அது வெறும் வதந்தி' என, தி.மு.க., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், பீஹார் தேர்தல் முடிந்ததும், ஜனவரியில் கவர்னர் உரைக்காக சட்டசபை கூடும்போதோ அல்லது டிசம்பரில் சட்டசபையை கூட்டியோ, ஹிந்தியை தடை செய்யும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவதுபோல, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளிட்ட அறிக்கையில், 'நாட்டின் முக்கிய திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் ஹிந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்' என, கேள்வி எழுப்பியுள்ளார். - -நமது நிருபர் -