புதிய திட்டங்களில் மின் உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையம் கெடு
சென்னை:உடன்குடி உள்ளிட்ட புதிய மின் நிலையங்களில் திட்டமிட்டபடி, இந்தாண்டிலேயே மின் உற்பத்தியை துவக்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய எண்ணுார் சிறப்பு; துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா, 660 மெகாவாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையங்களை, மின்வாரியம் அமைத்து வருகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் தலா, 125 மெகா வாட் திறனில், நான்கு அலகுகள் உடைய குந்தா நீரேற்று மின் நிலையமும்; நாமக்கல்லில், 20 மெகா வாட் திறனில், கொல்லிமலை நீர்மின் நிலையமும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையங்களின் கட்டுமானப் பணிகள் துவங்கி, நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. திட்டமிட்ட காலத்திற்குள் பணிகள் முடிவடையாததால், மின் உற்பத்தி துவக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மின் திட்டங்களின் நிலை குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில், உடன்குடி மின் நிலையத்தின் முதல் அலகில் அடுத்த மாதமும், இரண்டாவது அலகில் வரும் ஆகஸ்டிலும், மின் உற்பத்தி துவக்கப்பட இருப்பதாக, மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், குந்தா மின் நிலையத்தின் நான்காவது அலகில், வரும் ஜூலையிலும், மூன்றாவது அலகில் ஆகஸ்டிலும், இரண்டாவது மற்றும் முதலாவது அலகில் நவம்பரிலும்; கொல்லிமலை நீர்மின் நிலையத்தில், வரும் அக்டோபரிலும் உற்பத்தி துவக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதைக் கேட்ட ஆணையம், இந்த ஆண்டுக்குள் மின் உற்பத்தி துவங்குவதை உறுதி செய்ய, தேவையான பணியாளர்களை நியமித்து, பணிகளை வேகப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.