உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இன்ஜி., கட் ஆப் மதிப்பெண் குறையும்: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தகவல்

 இன்ஜி., கட் ஆப் மதிப்பெண் குறையும்: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நடப்பாண்டு இன்ஜினியரிங் படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் குறையும்,'' என, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 7.53 லட்சம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அடுத்தகட்டமாக, உயர் கல்வி சேர முனைப்பு காண்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு பிளஸ் 2 வகுப்பில் பல்வேறு பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதால், இன்ஜினியரிங் படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை காணும்போது, பல்வேறு பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கணிதப் பாடத்தில், 3,022 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதுவே, நடப்பாண்டு, 732 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல, இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு, 1,125 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தற்போது, 105 மாணவர்களே முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டு 3,181 மாணவர்கள், 100க்கு 100 மதிபெண் பெற்ற நிலையில், தற்போது, 632 மாணவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இதனால், இன்ஜினியரிங் படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்கள் 2 முதல் 4 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பு உள்ளது. கட் ஆப் மதிப்பெண் 180 - 195 வரை பெற்றவர்களுக்கு, 2 முதல் 4 மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல், 160 - 170 வரையில், 6 மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல், வணிகவியல் மற்றும் பொருளியல் படிப்பை பொறுத்தவரையில் கட் ஆப் மதிப்பெண்ணில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இருக்காது. கணக்கு பதிவியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அரசு கல்லுாரிகளில், இதற்கான போட்டிகள் எப்போதும்போல அதிகரிக்கும். மேலும், மீன் வளம், வேளாண்மை ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களும், 2 முதல் 4 மதிப்பெண் வரை குறையும். உயிரியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதால், பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் குறையும். இம்முறை விடைத்தாள் திருத்தும் முறையில் கொண்டு வந்த புதிய மாற்றத்தால், மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என, சி.பி.எஸ்.இ., மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர். தற்போது நடப்பாண்டு, 'கட் ஆப்' மதிப்பெண் குறையும் என்பதால், அவசரப்பட்டு, மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை நோக்கி செல்ல வேண்டாம். கடந்த ஆண்டுகளில், எந்தெந்த கல்லுாரிகளில் பாடப்பிரிவுகளுக்கு, எவ்வளவு 'கட் ஆப்' மதிப் பெண்கள் என்பதை மாணவர்கள் அறிந்து, தேவை இருப்பின் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை நாடலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !