பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை பகுதிகளில், பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., பகுதிகளில் உள்ள கடைகளில், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று, நாமகிரிப்பேட்டையில் அதிரடி சோதனை நடந்தது. டவுன் பஞ்., செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமையில், துப்புரவு அலுவலர் காளியப்பன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். ஆத்துார் மெயின் ரோடு, கடைவீதி, புதுப்பட்டி ரோடு மற்றும் அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் உள்ள, 15 கடைகளில் ஆய்வு செய்தனர்.இதில், 4 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர்கள் மற்றும் பைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்த, 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 4 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.