பா.ம.க., இளைஞரணி தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்: ராமதாஸ்
சென்னை: பா.ம.க., இளைஞரணி தலைவராக, ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் தைலா புரத்தில், நேற்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி: மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்படும் தமிழ்க்குமரனுக்கு ஏற்கனவே இந்த பதவி வழங்கப்பட்டது. அத்தகவலை தமிழ்க்குமரன், அன்புமணியிடம் தெரிவித்தபோது, நியமனக் கடிதத்தை கிழித்து போடுமாறு கூறியுள்ளார். அப்போது, நடந்த பொதுக்குழுவுக்கு தமிழ்க்குமரன் வரக்கூடாது என போனில் அன்புமணி என்னிடம் தெரிவித்தார். மைக் பாய்ந்தது அதனால் அந்த பொதுக்குழுவுக்கு தமிழ்க்குமரன் வரவில்லை. பின், தமிழ்க்குமரனிடம், நான் வழங்கிய நியமன கடிதத்தை கிழித்து போடுமாறு கூறிவிட்டேன். அதன் பிறகு நடந்த பொதுக்குழுவில், என் பேரன் முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அப்போதுதான் மைக் என் மேல் பாய்ந்தது. இப்போது அந்த பொறுப்பை தமிழ்க்குமரனுக்கு வழங்கியிருக்கிறேன். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் கூட்டங்கள் நடத்துபவர்கள் ஒரு உயிர் கூட பறிபோகாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, காவல்துறை வழிகாட்ட வேண்டும். நான் லட்சக்கணக்கானவர்களுடன் பூம்புகாரில் மகளிர் சங்க மாநாட்டை நடத்தினேன். அங்கு ஒரு பிரச்னை கூட இல்லை. கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார். சதி இருக்கிறதா என்று தெரியவில்லை. கரூர் சம்பவத்திற்கு முதல்வர் எப்படி காரணமாக முடியும். இதை எல்லாம் எழுத அக்கப்போர் ஆசாமிகள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் எதையாவது எழுதுகின்றனர். மகளுக்கு காத்திருப்பு சமூக வலைதளத்தில், என்னைப் பற்றி மிக மோசமாக எழுதுகின்றனர். கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர், 'கழுத்தில் துண்டு போட்டு என்னை இறுக்க வேண்டும்; முகத்தில் தலையணை வைத்து அழுத்த வேண்டும்' என பதிவிடுகிறார். அவருக்கு இளைஞரணி மாநில துணைச் செயலர் பொறுப்பு தந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அசிங்கமாக, அருவருக்கத்தக்க பதிவுகள் வெளியிடுவதை, சிலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை, காலம் கண்டிக்கும்; தண்டிக்கும். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்புக்கு வந்த ராமதாஸ், 20 நிமிடங்கள் காத்திருந்து, மகள் ஸ்ரீ காந்திமதி வந்த பின்னரே பேசத் துவங்கினார். மகளுக்கு, 43வது திருமண நாள் வாழ்த்துகளை, ராமதாஸ் தெரிவித்தார். துவங்கிய இடத்திற்கே வந்த ராமதாஸ் கடந்த 2022ல், பா.ம.க., தலைவராக அன்புமணி பொறுப்பேற்றதும், அவர் வகித்து வந்த இளைஞரணித் தலைவர் பதவியில் தமிழ்க்குமரனை, ராமதாஸ் நியமித்தார். இதை அன்புமணி ஏற்காததால், அவர் ராஜினாமா செய்தார். இதிலிருந்துதான் ராமதாஸ் -- அன்புமணி மோதல் உருவானது. பின்னர், 2024 டிசம்பரில் தன் பேரன் முகுந்தனை, இளைஞரணித் தலைவராக, ராமதாஸ் நியமித்தார். அன்புமணி எதிர்ப்பால், அவரும் விலகினார். இப்போது மோதல் முற்றி, இருவரும் தனித்தனியாக செயல்படும் நிலையில், தமிழ்க்குமரனை மீண்டும் பா.ம.க., இளைஞரணித் தலைவராக ராமதாஸ் நியமித்துள்ளார்.