வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கிறது அரசு
சென்னை:தமிழகத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில், வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில், 38 மாவட்டங்களில், தொழிற்சாலைகள் முதல் சாலையோர உணவு கடைகள் வரை, வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் அரசிடம் இல்லை. தமிழகத்தில், சட்டம் -- ஒழுங்கு பிரச்னை, குற்ற சம்பவங்களை நிகழ்த்தும் வெளிமாநில தொழிலாளர்களை அடையாளம் காண்பதிலும், அவர்களை கண்டறிந்து கைது செய்வதிலும், சிக்கல் ஏற்படுகிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த, தொழிலாளர் நலத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான, பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.