மெடிக்கல் காலேஜுக்கு மாணவர்களை பிடிக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
சென்னை:அரசு மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு இடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தர விட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில், 5,944 இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு, முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடந்த நிலையில், 1,316 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. மீதமுள்ள 4,628 மருத்துவ இடங்கள் நிரம்பாத நிலையில், இது தொடர்பான ஆய்வு கூட்டம், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. அதில், காலி இடங்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாக நிரப்ப முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கடிதம் எழுதி உள்ளார். அதில், 'காலியாக உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்பு இடங்களை நிரப்ப வேண்டும். ' இட ஒதுக்கீடு அடிப்படையில், ஊரக மற்றும் நகர்பகுதி மாணவர்கள் பயனடையும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தி, மா ணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இந்த மாணவர் சேர்க்கை நடைமுறையை, அக்., 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.