உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளி மாணவர்கள் கையில் சமச்சீர் புத்தகம் :விநியோகத்தை ஆய்வு செய்ய குழு

அரசு பள்ளி மாணவர்கள் கையில் சமச்சீர் புத்தகம் :விநியோகத்தை ஆய்வு செய்ய குழு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் சமச்சீர் கல்வி புத்தகம் வகுப்பு வாரியாக நேற்று வழங்கப்பட்டது. சமச்சீர் கல்வி விவகாரம், உச்சநீதிமன்றம் வரை சென்றதால், இந்தாண்டு நடைமுறைக்கு வருமா; வராதா என்கிற குழப்பம் நீடித்தது. 'நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 10 நாட்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்கிடவும்' உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

'சமச்சீர் கல்வி திட்டத்தை உடனே அமல்படுத்துவோம்' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கப்பட்டது.சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதைகள், செம்மொழி மாநாடு சின்னங்கள் உள்ளிட்ட 41 பகுதிகளை நீக்க, அரசு உத்தரவிட்டது. ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்ட இவை, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நேற்று வழங்கப்பட்டன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் அவை வழங்கப்படவில்லை.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குமார் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மாணவ, மாணவியர் அனைவருக்கும் புத்தகம் சென்றுவிட்டது. நேற்று முன்தினம் ஆகஸ்ட் 15 அன்றே ஓரளவுக்கு புத்தகம் வழங்கப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் நேற்று வழங்கப்பட்டது. தேவைப்பட்டியல் படி, அனைத்து புத்தகமும் நமக்கு வந்தாகி விட்டது.

புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைந்து விட்டதா என்பதை அறிய கல்வித்துறையில், தனிப்படை உருவாக்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொருவருக்கும் நான்கு பள்ளி ஒதுக்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியை எனது தலைமையில் சமச்சீர் கல்வி புத்தகம் குறித்து ஆய்வு செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சமச்சீர் கல்வி புத்தகம் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டாலும், பாடத்தின் அறிமுகமில்லாமல் வகுப்பு ஆசிரியர்கள் குழம்பி போயுள்ளனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமச்சீர் கல்வி புத்தகம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கருத்தாளர்கள் குழு அமைத்து, அதன்பின் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி