துாத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை; அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு
சென்னை: துாத்துக்குடியில், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, வேதாந்தா நிறுவனம் சார்பில், புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை அடுத்து, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, 2018ல் மூடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 2020ல் உத்தரவிட்டிருந்தது; இதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், பசுமை முறையில் தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி, தமிழக தொழில் துறை, சுற்றுச்சூழல் துறை செயலர்களுக்கு, ஜூன் முதல் நவம்பர் வரை ஆறு மனுக்கள் அனுப்பியும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்த மனுக்களை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை பிரதிநிதிகள், நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், 'பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக, அரசுத் துறை செயலர்களுக்கு மனு மட்டுமே அனுப்பப்பட்டு உள்ளதே தவிர, முறையாக விண்ணப்பிக்கப் படவில்லை' என தெரிவிக்கப்பட்டது. அப்போது, 'மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து, அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது' என, மனுதாரர் மற்றும் அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிட்டனர். விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.