உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊராட்சி தலைவர் மன்னராக முடியாது அபராதம் விதித்து ஐகோர்ட் எச்சரிக்கை

ஊராட்சி தலைவர் மன்னராக முடியாது அபராதம் விதித்து ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை:விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டியில், கோவில் நிலத்தில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள கலெக்டர், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், ரோசல்பட்டி ஊராட்சி தலைவருக்கு தடை விதிக்கக்கோரி, கோவில் நிர்வாகி பழனிசாமி ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.கடந்த, 2022ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அந்நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்கிறார் மனுதாரர். அது அரசு புறம்போக்கு நிலம் என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. அது தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோவில் நிறுவப்பட்ட நிலம் போக மீத நிலத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.அப்பகுதி குழந்தைகளின் மீது மனுதாரர் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். கோவில் தொடர்ந்து இருக்கும். அங்கன்வாடி கட்டுமானம் தொடர்பான ஆட்சேபனைகள் தவறானவை. இம்மனு ஏற்புடையதல்ல. ஏற்கனவே கட்டப்பட்ட கட்டுமானத்தைத் தவிர வேறு எந்த கட்டுமானத்தையும் அரசு தரப்பில் மேற்கொள்ளக்கூடாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.ரோசல்பட்டி ஊராட்சி தலைவர், 'தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு தாக்கல் செய்வதில் 816 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை மன்னித்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்' என, மனு செய்தார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: பிரமாண பத்திரத்தின் ஒரு பத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை கண்டிக்கத்தக்கது. ஒரு ஊராட்சி தலைவர் அரசின் மன்னராக முடியாது. உத்தரவில் தேவையற்ற கருத்து உள்ளதாகவும், அதனால் தனக்கு வருத்தம் இல்லை எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. உயர் நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் காப்பகத்திற்கு 10,000 ரூபாயை மனுதாரர் செலுத்த வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து நவ., 11ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ