காப்பீடு தொகை தாமதத்தால் நோயாளியை அனுப்ப மறுத்த மருத்துவமனை முற்றுகை
ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துாரை அக்கரைப்பட்டியை சேர்ந்த செங்கோட்டையன் மனைவி லலிதா, 42; ஒரு வாரத்துக்கு முன் வயிற்று வலியால், ராசிபுரத்தில் ஆத்துார் பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லலிதா சிகிச்சைக்கு சேர்ந்தார். மருத்துவ பரிசோதனையில் கர்ப்பப்பையை அகற்றுமாறு கூறியுள்ளனர். குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் இருப்பதால், மருத்துவமனையில் உள்ள இன்சூரன்ஸ் பிரிவை செங்கோட்டையன் அணுகினார். அவரிடம், ஆப்பரேஷனுக்கு 1.30 லட்சம் ரூபாய் செலவாகும்; இன்சூரன்ஸ் தொகை கிடைக்க தாமதமாகலாம். முதல்கட்டமாக, 50,000 ரூபாய் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.இதையடுத்து, 50,000 ரூபாயை செலுத்தியுள்ளார். கடந்த வாரம் ஆப்ரேஷன் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லலிதாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாமா என, கேட்டுள்ளனர். காப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை எனக்கூறி அனுப்ப மறுத்துள்ளனர்.ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் போலீசார் பேச்சு நடத்தினர். இதில், இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவில்லை என்றால், மீதி தொகையை செலுத்த செங்கோட்டையன் சம்மதித்தார். இதையடுத்து, நோயாளியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.