உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் சலுகை அறிவித்தால் அரிசி கார்டுகள் குறைந்து பல கோடி ரூபாய் மிச்சமாகும்

அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் சலுகை அறிவித்தால் அரிசி கார்டுகள் குறைந்து பல கோடி ரூபாய் மிச்சமாகும்

சென்னை: 'அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமின்றி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து வகை ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசும், இதர அரசு சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தால், ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகும். அத்துடன், அரிசி கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் குறையும். தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதைப்பெற ரேஷன் கார்டு அவசியம்.

அரிசி கார்டு

முன்னுரிமை அரிசி, முன்னுரிமையற்ற அரிசி, அந்தியோதயா, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காதது போன்ற பிரிவுகளின் கீழ், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. பொங்கல் பரிசு, பேரிடர் நிவாரண தொகை என, அரசு வழங்கும் சலுகைகள் எல்லாம், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதால், பலரும் அரிசி கார்டு கேட்டே விண்ணப்பம் செய்கின்றனர். தற்போது, மொத்தம் உள்ள, 2.28 கோடி ரேஷன் கார்டுகளில், 3.60 லட்சம் மட்டுமே சர்க்கரை கார்டுகள், 60,000 கார்டுகள் எந்த பொருளும் வாங்காதவை. மீதமுள்ள, 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஒரு கார்டுக்கு, ஆண்டுக்கு சராசரியாக, அரசு 1,000 ரூபாய் செலவு செய்கிறது. மாதந்தோறும் சராசரியாக, 2 கோடி கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கும் நிலையில், 20 லட்சம் பேர் எந்த பொருட்களையும் வாங்குவதில்லை. அவர்கள் பொங்கல் பரிசு வாங்கவே, ரேஷன் கார்டை பயன்படுத்துகின்றனர். தற்போது, பலரும் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, அரிசி கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

ரூ. 10,500 கோடி

இதுகுறித்து, உணவு வழங்கல் துறையின் உதவி ஆணையர்கள் கூறியதாவது: உணவு மானியத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும், 10,500 கோடி ரூபாயை அரசு செலவழிக்கிறது. அரிசி கார்டு கேட்டு மாதம் சராசரியாக, 40,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களில், 50 சதவீதம் பேர் தகுதியற்றவர்கள். மொத்த ரேஷன் கார்டுதாரர்களில், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காதவர்கள் எண்ணிக்கை, 4 லட்சம் தான். இவர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1,000 ரூபாய் வழங்கினால், ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் தான் செலவாகும். அரிசி கார்டு வைத்திருந்தும், மாதம், 20 லட்சம் பேர் பொருட்கள் வாங்காததால், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவு மிச்சமாகிறது. பொங்கல் பரிசு உள்ளிட்ட சலுகைகளை, அரிசி கார்டுக்கு மட்டுமே அறிவிப்பதால், அனைவரும் அரிசி கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். தற்போது, மகளிர் உரிமைத்தொகை, ரேஷன் கார்டு அடிப்படையில் இல்லாமல், சில தகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது.

சலுகைகள்

அதேபோல, அனைத்து வகை கார்டுதாரர்களுக்கும், தகுதிக்கேற்ப அரசு வழங்கும் சலுகைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தால், அரிசி கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறையும். அதேபோல, அரிசி வாங்க விருப்பம் இல்லாதவர்கள், அரசிடம் தெரிவிக்கலாம். அதனால், மற்ற சலுகைகள் பாதிக்கப்படாது என்று அறிவித்தால், அரிசி கார்டு வைத்திருப்போரும், மற்ற வகை ரேஷன் கார்டுக்கு மாற வாய்ப்புள்ளது. இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சேமிப்பாகும். இதுபற்றி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

A.Gomathinayagam
ஜூன் 08, 2026 14:23

வருமான அடிப்படியில் மட்டுமே இலவசங்கள் வழங்கினால் ,ரேஷன் பொருட்கள் கடத்தல்களை அடியோடு ஒழிக்கலாம் .மக்கள் வரிப்பணம் பல கோடி மிச்சமாகும்


RAVINDRAN.G
ஜூன் 08, 2026 10:44

ரேஷன் கடையில் இதர மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அதில் MRP விலை அளிக்கப்பட்டு கடைக்காரர் இஷ்டத்துக்கு விலை சொல்லுகிறார். நேற்று பழைய பல்லாவரம் ரேஷன் கடையில் கொத்துக்கடலை 500 கிராம் வாங்கினேன். 70 ருபாய் சொன்னார் . பாக்கெட்டில் 40 ருபாய் என்று அச்சு இடப்பட்டதை அளித்து உள்ளனர். கேட்டால் சரியான பதில் இல்லை. வேறு ஒரு பாக்கெட்டை காட்டினார். அதிலும் MRP ஸ்டிக்கர் அழிந்து இருந்தது. எனக்கு பொருள் வேண்டாம் என்று ரெட்டர்ன் செய்து காசை கேட்டு வாங்கிட்டுவந்தேன். விலைவாசி தெரியாத ஆள் என்றால் ஏமாற்றிவிடுவார்கள். கொத்துக்கடை வெளிமார்க்கெட்டிலேயே கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவர் 500 கிராம் 70 ரூபாய்க்கு விற்கிறார். என்ன நியாயம் இது.


Anantharaman Srinivasan
ஜூன் 08, 2026 23:27

ரேஷன் கடையில் மளிகை சாமான்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் என்ற காடட்டாயாமில்லை.


Krishna
ஜூன் 08, 2026 10:33

Other than Giving MinmWageJOBS Strictly 01PerFamily, ABOLISH 90%NotDue VoteBribingFreebies& 95%UselessOverFattened GovtPosts. RECOVER from All Ruling AllianceParty Rulers& StoogeOfficials


chennai sivakumar
ஜூன் 08, 2026 08:05

அடுத்தவன் வீட்டு நெய்யே என் அண்ணன் பொண்டாட்டி கையே என்பதுபோல எல்லோருக்கும் ரேஷன், எல்லோருக்கும் தீபாவளி gift. இது எல்லாம் தேவையே இல்லை. ரேஷன் கார்டு உபயோகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக காரில் வந்து? ரேஷன் வாங்கி செல்வதை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். அவர்கள் வாங்காத பொருட்களை வாங்கியதாக கணக்கு காட்டி சுவாக நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பெரிய exercise . இதை படி படியாக மட்டுமே அமல் செய்ய முடியும். அடுத்தது சமீபத்தில் நடை பெற்ற தேர்தலுக்கு sir செய்த data வைத்து கொண்டு ரேஷன் கார்டு members மாற்றி அமைக்க வேண்டும். அப்போது ஓரளவு குறையும். வாசகர் கூறியது போல ஆதார் இணைப்பு, பான் இணைப்பு, வருமான வரி இணைப்பு செய்து உண்மையிலேயே தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் கொடுக்க வேண்டும். புதிய அரசு சீர்திருத்த நடவடிக்கை எடுக்குமா??


R.RAMACHANDRAN
ஜூன் 08, 2026 07:12

அரசு ஊழியர்களுக்கு இலவசமாக அரிசி, சலுகை விலையில் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் பொங்கல் பரிசுகள் ஆகியன இல்லாமல் செய்தால் ஆண்டுக்கு ஆயிரக் கணக்கான கோடிகள் மிச்சமாகும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்துக்கும் அரசு சம்பளம் வழங்குவதோடு பொங்கல் போனசும் வழங்கும் நிலையில் வாக்கு வங்கிக்காக இலவசமாக அரிசி, சலுகை விலையில் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் பொங்கல் பரிசுகள் ஆகியன வழங்கப்படுகின்றன.அதன் பிறகும் அவர்கள் நேர்மையாக கடமைகளை செய்யாமல் லஞ்சத்தின் அடிப்படையில் சேவைகள் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் செய்து அரசுக்கு அவப்பெயரும் பொருளாதார இழப்பும் ஏற்படுத்துகின்றனர்.


GMM
ஜூன் 08, 2026 07:07

ரேஷன் கார்டு ஆதார் எண்ணை இணைத்து முதலில் போலிகளை நீக்க வேண்டும். மேலும் வருமான வரி எண்ணுடன் இணைத்தால் மேலும் தகவல் கிடைக்கும். டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல் உணவு பொருட்கள் எடை போட்டு பாக்கெட்டில் அடைத்து கொடுக்க வேண்டும். எண்ணெய் என்றால் டின் அல்லது பாட்டில். ரேஷன் கடையில் ஆவின், அம்மா குடிநீர், காதி பொருட்கள்.. போன்றவை விற்பனை செய்ய வேண்டும்..இதில் சற்று வருவாய் கிடைக்கும். ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் கூடாது. அரசு நிலத்தில் வடிவமைத்து தமிழக முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை