இன்ஜி., டிப்ளமா மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி சென்னை ஐ.ஐ.டி., நடவடிக்கை
சென்னை:இன்ஜி., மற்றும் டிப்ளமா மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு திறன் பயிற்சிகள் வழங்க, சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளது. இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுதும் இன்ஜினி யரிங் மற்றும் டிப்ளமா படிக்கும் மாணவர்கள், வேலை வாய்ப்பு திறன்களை பெற, தேசிய அளவிலான உள்ளக பயிற்சி, வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் மதிப்பீடு நிறுவனத்துடன் இணைந்து, புதிய திறன் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், சமீபத்தில் கையெழுத்தானது. மூன்றாம் மற்றும் இறுதியாண்டு இன்ஜி., மாணவர்கள், சமீபத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள், இறுதியாண்டு டிப்ளமா மாணவர்கள் ஆகியோருக்கு, இந்த திறன் பயிற்சிகள் வழங்கப்படும். கணிதத் திறன், தொடர்பு திறன், துறை வாரியாக மாணவர்களுக்கு உள்ள தொழில்நுட்ப அறிவு திறன் என, பயிற்சிகள் வழங்கப்படும். 10 முதல் 12 வாரங்கள் பயிற்சிகள் வழங்கப்படும். அதன்பின், மதிப்பீட்டு தேர்வு நடக்கும். பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., சார்பில், சான்றிழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.