சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக மின் உற்பத்தி கழகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு:
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கிடைக்கும் உலர் சாம்பல் சிறு, குறு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படாமல், மாவட்டத்தில் உள்ள 'முத்துகுமார் டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது. சட்டவிரோதமாக பெற்ற உலர் சாம்பல், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து, கடந்த ஜனவரி 31ல், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநருக்கு அளித்த புகார் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புகார் மனுவை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க, மின் வாரிய இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து, உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக, தமிழக மின் உற்பத்தி கழக மேலாண் இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மின் உற்பத்தி கழக மேலாண் இயக்குனர் கோவிந்த ராவ் நேரில் ஆஜராகி, உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார். அதை பார்வையிட்ட நீதிபதிகள், 'கடந்த ஜனவரியில் அளித்த புகார் மீது, உடனே விசாரணை நடத்தாதது ஏன்?' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''உலர் சாம்பல் விற்பனை தொடர்பாக, தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு பின், மனுதாரர் தெரிவித்த புகார் குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது,'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், இலவசமாக வழங்கப்பட்ட உலர் சாம்பல், அதிக விலைக்கு விற்கப்படுவதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக மின் உற்பத்தி கழகம் அமைத்துள்ள குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.