தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் கோலாகலமாக நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம்
ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் KN நேரு அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் முதல் கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர். இதில் திருச்சி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் KN நேரு அவர்கள் வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான KPY பாலா, வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கிராமத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.