உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மா விவசாயிகளுக்கு விரைவில் விடிவுகாலம்: சொல்கிறார் இபிஎஸ்

மா விவசாயிகளுக்கு விரைவில் விடிவுகாலம்: சொல்கிறார் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேப்பனஹள்ளி: அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று பிரசார பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார சுற்றுப்பயணத்தின் மூன்றாவது கட்டத்தைத் தொடங்கிய இபிஎஸ் இன்று வேப்பனஹள்ளி, தளி மற்றும் ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திந்தார். இன்று மாலை வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை பஸ் நிலையம் அருகில் பெருமளவு கூடியிருந்த மக்களிடம் இபிஎஸ் பேசியதாவது:ராயக்கோட்டை பகுதி ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். உங்கள் மகிழ்ச்சியே தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனை. விவசாயிகள் நிறைந்த இந்த பகுதிக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். இங்கு மலர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்கள், காய்கறிகளும் அதிகம் உற்பத்தியாகிறது. இந்த தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்காக இந்தோ - இஸ்ரோ கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் உருவாக்கிக் கொடுத்தோம். மலர்கள் விற்பதற்கு சர்வதேச ஏல மையம் ஒன்றை 20 கோடியில் அமைத்துக்கொடுத்தோம். பெங்களூரு சென்று விற்கும் அவல நிலையை மாற்றி இங்கேயே நல்ல விலை கிடைப்பதற்கு இந்த ஏற்பாடு செய்தோம். ஆனால், அந்த மையம் அப்படியே பூட்டிக்கிடக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் சர்வதேச ஏல மையம் திறக்கப்படும்.விவசாயிகளுக்கு இன்று மின்சாரம் ஷிப்ட் முறையில் கொடுக்கப்படுகிறது. இரவில் மின் மோட்டரை இயக்க முடியவில்லை, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 24 மணி நேரம் மின் மோட்டார் இயக்கலாம். மலர்களுக்கு நிறைய மானியம் கொடுத்தோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் மானியத்தை நிறுத்திவிட்டனர். அதேபோல குடிமராமத்து திட்டத்தையும் திமுக அரசு ரத்துசெய்துவிட்டது. விவசாயிகளின் பயிர்க்கடன் இரண்டு முறை 12,100 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2248 கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்தோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசு அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும், ஒரு கிலோ மாம்பழம் 13 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மா விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தினோம். அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் ஏழை, தாழ்த்தப்பட்டோருக்கு, மலைவாழ் மக்களுக்கும் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்போம். அதிமுக மக்கள் கட்சி, உங்கள் கட்சி. மக்கள் எண்ண ஓட்டத்துக்கு ஏற்றவாறு அதிமுக ஆட்சி புரியும். அதிமுக ஆட்சி அமைந்ததும் தீபாவளி பண்டிகையின்போது சேலை வழங்கப்படும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்.இவ்வாறு இபிஎஸ் பேசினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெய்ஹிந்த்புரம்
ஆக 11, 2025 23:31

பாமக கூட்டணி பற்றி சொல்றாரா?


திகழ்ஓவியன்
ஆக 11, 2025 21:22

அன்னே உங்களுக்கு என்று விடிவு காலம் என்னவோ CM RANGE க்கு அள்ளி அள்ளி விடுகிறீர்கள் , பா.ஜ. ஆட்களே வெட்கப்படுகிறார்கள் ,


SUBBU,MADURAI
ஆக 11, 2025 20:50

ஒரே கன்பூஸா இருக்கு ஏதனுக்கும் கொஞ்ச நாளைக்கு பொறுத்து இருந்து பார்ப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை