உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பருவமழை நேரத்தில் பணியிட மாற்றம் நீர்வள துறையில் திடீர் சலசலப்பு

பருவமழை நேரத்தில் பணியிட மாற்றம் நீர்வள துறையில் திடீர் சலசலப்பு

சென்னை:வடகிழக்கு பருவமழை துவங்கும் நேரத்தில், நீர்வளத் துறையில் பல பொறியாளர்கள், 'பசை'யான பதவிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத் துறை வாயிலாக, ஆறுகள், ஏரிகள், அணைகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்வழித்தடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை துார்வாருதல், மேம்படுத்துதல், அணைகள், தடுப்பணைகள் கட்டுமானம், சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. கடும் போட்டி இது மட்டுமின்றி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மன் வங்கி என, பன்னாட்டு நிறுவனங்களிடம் கடனுதவி பெற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டசபையில் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை, முதல்வரின் அறிவிப்புகளுக்கு, உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் வாயிலாக, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. சில ஆண்டுகளாக, நீர்வளத் துறைக்கு அறிவிக்கப்படும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, ஒப்பந்ததாரர் தேர்வு செய்யும் நேரத்திலும், பணி துவங்கும் நேரத்திலும், உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், தலைமை பொறியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர். அத்தகைய நேரத்தில், பெரிய தொகையில் பணிகளை மேற்கொள்ளும் பதவிகளை பிடிப்பதற்கு, பொறியாளர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்படுகிறது. பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஏற்ப, 'கமிஷன்' கைமாறிய பின், பணியிடமாற்றம் உறுதி செய்யப்படுகிறது.இதனால், அரசியல் செல்வாக்கு, பணபலம் கொண்ட பொறியாளர்கள் பயனடைந்து வருகின்றனர். நேர்மையான அல்லது செல்வாக்கு இல்லாத பொறியாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு திடீரென துாக்கி அடிக்கப்படும் நடைமுறை தொடர்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், நீர்வளத் துறையில், 22 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, திருச்சி, தேனி, மதுரை, சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை, வேலுார், உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும், 13 செயற்பொறியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 'டம்மி' பதவி ஏற்கனவே, பணியிடமாற்றம் செய்யப்பட்டு, பசையான பதவிகளுக்காக விடுமுறையில் இருந்தவர்களுக்கு, பழைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களில், அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கவனிக்க வேண்டியவர்களை கவனிக்காததால், பசையான பதவிகளில் இருந்தவர்கள், 'டம்மி' பதவிகளுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் பரிந்துரைப்படி, செயலர் ஜெயகாந்தன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கும் நேரத்தில், அனுபவமான அதிகாரிகள் பணியிடத்தில் இருந்தால் மட்டுமே, நிலைமையை சமாளிக்க முடியும். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், நீர்வளத் துறையில் திடீர் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் அரங்கேறி இருப்பது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ