கிருஷ்ணகிரி : வரதட்சணை கொடுமை குறித்து மனைவி அளித்த புகாரில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்யாமல் இருக்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பர்கூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன், 35; இவரது மனைவி வசந்தி, 28. மூன்றாண்டுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, குழந்தை இல்லை. தம்பதியர் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத் தகராறில் சரவணன், வசந்தியை அடித்துள்ளார். ஆத்திரமடைந்த வசந்தி, சரவணன் மற்றும் அவரது குடும்பத்தார், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கடந்த 10ம் தேதி, பர்கூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இரு தரப்பினரையும் அழைத்து எஸ்.ஐ., சித்ரா, 32, விசாரித்தார். 'வரதட்சணை கொடுமை வழக்கில், குடும்பத்தில் உள்ள அனைவரையும் கைது செய்தால், ஜாமின் எடுக்க ஒரு லட்ச ரூபாய் செலவாகும். எனக்கு, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால், வழக்கு போடாமல் இருக்கிறேன்' என, சரவணன் குடும்பத்தாரிடம், எஸ்.ஐ., சித்ரா கூறினார். கடந்த 22ம் தேதி, விசாரணைக்கு பர்கூருக்கு வந்த சரவணன், 3,000 ரூபாயை சித்ராவிடம் கொடுத்து, '50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வசதியில்லை' எனக் கூறினார். அடுத்த நாள் கொண்டம்பட்டிக்கு நேரடியாகச் சென்ற எஸ்.ஐ., சித்ரா, 'நான் ஊத்தங்கரை அடுத்த வெள்ளைகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவள்; பக்கத்து ஊர்காரர் என்பதால், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் போதும்' என, கூறியுள்ளார். இதுகுறித்து சரவணன், நேற்று காலை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாயை, நேற்று மதியம், பர்கூர் ஸ்டேஷனில் இருந்த எஸ்.ஐ., சித்ராவிடம் லஞ்சமாக சரவணன் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக ஸ்டேஷனுக்குள் நுழைந்து, லஞ்சம் வாங்கிய சித்ராவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.