மேலும் செய்திகள்
விட்டுக்கொடுத்தால் மகிழ்ச்சி பெறலாம்
15-Feb-2025
சென்னை: ''தண்டனைக்கு பயப்படுவதால், மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மீறாமல் இருக்க முயற்சிக்கிறோம். தர்மம் என்ற சட்டத்தை மீறுவதும் விளைவுகளை ஏற்படுத்தும்,'' என, சென்னைக்கு விஜயம் செய்துள்ள மாதா அமிர்தானந்தமயி அருளாசி வழங்கினார்.ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பின், தென் மாநில சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, மாதா அமிர்தானந்தமயி சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். தண்டனை
விருகம்பாக்கத்தில், 1990ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரம்மஸ்தான ஆலயத்தின், 35வது மகோற்சவத்தில் பங்கேற்ற அவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கியதாவது:இங்கு இதயங்களின் ஒற்றுமையைக் காண முடிகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான ஒரு குறுகிய இடைவெளியே வாழ்க்கை. நம் செயல்கள் நல்லதாக இருக்கும்போதுதான், வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகிறது.மூன்று விஷயங்கள் மனிதகுலத்தை வளர்க்கத் துாண்டுகிறது. அது கூட்டுறவு, தோழமை மற்றும் ஒற்றுமை. சக மனிதர்களுடன் ஒத்துழைத்து, இயற்கையுடன் கூட்டுறவாக இருந்து, இறைவனுடன் இணக்கமாக வாழ வேண்டும்.அவ்வாறு செய்யத் தவறினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.மனிதகுலம் பல தலைமுறைகளாக இயற்கையை துன்புறுத்துகிறது. இயற்கை மனிதகுலத்தை மன்னித்து வருகிறது. ஆனால், இது இனி தொடராது. இயற்கை அன்னையின் சக்தியை நாம் மறந்துவிட்டோம். எனவே, இயற்கையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம்.மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் உள்ளன. உலகளாவிய சக்தியால் நமக்கு வழங்கப்பட்ட தெய்வீக சட்டத்தை நாம் தர்மம் என்று அழைக்கிறோம்.தண்டனைக்கு பயப்படுவதால் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மீறாமல் இருக்க முயற்சிக்கிறோம். தர்ம சட்டத்தை மீறுவதும் விளைவுகளை ஏற்படுத்தும். பிரபஞ்சத்தின் சட்டமான தர்மத்தை மாற்றவோ, திருத்தவோ முடியாது. முயற்சிக்க வேண்டும்
மனிதன் பறவை போல பறக்கவும், மீனைப் போல நீந்தவும் கற்றுக்கொள்கிறான். ஆனால், ஒரு மனிதனைப் போல நடக்கவும், வாழவும் மறந்துவிட்டான். ஆமை எங்கு ஊர்ந்து சென்றாலும், அது மணலில் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறது. அதேபோல, நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்முன், ஒரு அடையாளத்தை விட்டுச் செல்ல முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அருளாசி வழங்கினார்.
15-Feb-2025