உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிப்பெயர்களை நீக்கும் திட்டத்தை திரித்து தவறாக பிரசாரம் செய்வது கண்டிக்கத்தக்கது அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்

ஜாதிப்பெயர்களை நீக்கும் திட்டத்தை திரித்து தவறாக பிரசாரம் செய்வது கண்டிக்கத்தக்கது அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்

காரியாபட்டி: ''சமூக நீதியின் பயணமாக பொது இடங்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் திட்டத்தை பழனிசாமி திரித்து தவறாக பிரசாரம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது ,'' என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் அவர் கூறியதாவது: அரசின் பெயர் மாற்றும் திட்டம் என்பது ஊர், தெரு, சாலைகள் என பொது இடங்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி, மாற்று பெயர் இடுவது ஆகும். சமத்துவத்தை உருவாக்கி, சாதி பாகுபாடுகளை களையும் நோக்கமே இதுவாகும். கிராம சபை கூட்டங்கள் மூலம் மக்களிடம் கருத்து கேட்ட பின், பெயர் மாற்றங்கள் செயல்படுத்தப்படும். இதற்கு வேறு வண்ணம் பூசும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பிரசாரம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. மாலை நேர பிரசாரத்தில் ஏதாவது கருத்துக்களை திரித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அரசியல் நோக்கத்திற்காக குறுக்குச்சால் ஓட்டுவதை அவர் நிறுத்த வேண்டும். கோவையில் முதல்வர் திறந்த மேம்பாலத்திற்கு ஜி.டி நாயுடு பெயர் சூட்டப்பட்டதை, தவறாக புரிந்து, நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என வேண்டுமென்றே பொய் பிரசாரம் பரப்பி வருகிறார். நீதியின் பயணமாக இருக்கக்கூடிய இந்த திட்டத்தை அரசியல் லாபமாக பார்க்க வேண்டாம். அரசு பட்டியலில் இருந்து தான் பெயர் சூட்ட வேண்டும் என கட்டாயம் இல்லை. அந்த பகுதி மக்களே பெயரை தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சமுதாய மக்கள் இழி நிலை படுத்துவதை தவிர்க்க இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 21 நாட்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும். விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது, அம்மிக் குளவியை எடுத்து அடி வயிற்றில் அரைத்து கொள்வது போல் உள்ளது. இந்த விமர்சனங்களை எல்லாம் முறியடித்து, தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை