சென்னை : 'பிரிக்ஸ்' நாடுகளுக்கு இடையே, ஆராய்ச்சி, தொழில்நுட்ப பகிர்வுகள் வலுப்பட வேண்டும் என, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, 'பிரிக்ஸ்' என, அழைக்கப்படுகிறது. இந்த நாடுகளின், அறிவியல், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் தொடர்பான, 14வது கூட்டம் சென்னையில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சியில், மத்திய அறிவியல், தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த கூட்டம், 'மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்பதை கருப்பொருளாக வைத்து நடந்தது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதன் வழியே, மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என பகிரப்பட்ட நம்பிக்கையை, இந்த கருப் பொருள் பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, 'குவாண்டம்' தொழில்நுட்பம், மேம்பட்ட பொருட்கள், உயிரி தொழில்நுட்பம், ஒளியியல், புவிசார் தொழில்நுட்பம், உயர் செயல்திறன் கணினி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால், உலகம் விரைவாக மாற்றமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பங்கள், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். அதேநேரத்தில், 'பிரிக்ஸ்' நாடுகள் இணைந்து, எளிய மற்றும் பாதுகாப்பான கண்டுபிடிப்புகளை உருவாக்க, கூட்டாக உழைக்க வேண்டும். 'பிரிக்ஸ்' உறுப்பு நாடுகளுக்கு இடையே ஆராய்ச்சி, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கான ஆதரவு, திறமையான நபர்களின் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு ஆகியவை வலுப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.