| ADDED : பிப் 17, 2025 05:17 AM
மதுரை : தமிழக நிலஅளவைத் துறையில் துவக்கத்தில் அளவுகோல், 'இரும்புச் சங்கிலி'யை கருவியாகக் கொண்டு நிலங்களை அளவீடு செய்தனர். கால மாற்றத்தில் 'டேப்'களை கையாண்டு கணக்கீடு செய்யப்படுகிறது. தற்காலத்தில் நிலங்களின் சந்தை மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளதால் துல்லியமாக நீள, அகலம், அதன் பரப்பளவை கணக்கிட்டு, அதற்கேற்ப பத்திரப் பதிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு தற்போது நிலஅளவைத் துறையில் புதிய திட்டமாக நவீன தொழில்நுட்பமாக டி.ஜி.பி.எஸ்., (டிபரன்ஷியல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) இயந்திரம் மூலம் அளவிடுகின்றனர். இதில் பரப்பளவு, நீள அகலமும் துல்லியமாக உள்ளதால் காலம், பணவிரயம் தவிர்க்கப்படுகிறது. இப்பணியை விரைந்து முடிக்க கூடுதலாக 'ட்ரோன்'களும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இதுபற்றி பொதுமக்களும் தெரிந்து இருந்தால் அதனை நடைமுறைப்படுத்த எளிதாகும்; செயல்பாடும் முழுமை பெறும்.இக்காலத்தில் தனியார் சிலரிடம் இந்த தொழில்நுட்பம் உள்ளது. அவர்களிடம் சர்வே செய்ய விண்ணப்பித்தால் ரூ.பல ஆயிரங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். அவர்கள் நிலத்தை அளவீடு செய்து நீள, அகல, பரப்பளவு குறித்து உடனே தந்துவிடுவர். இதனை நிலஅளவைத் துறையில் செயல்படுத்துவதால், கட்டணமும் குறைவு. பொதுமக்களும் விரைவாக, துல்லியமாக, குறைந்த செலவில் பெற முடியும். இதற்கான கட்டமைப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு ரூ. பல ஆயிரம் கோடிகளை செலவிட்டும் பணிகள் முடியவில்லை. இப்போது முன்னோடி திட்டமாக கோவை மாவட்டத்தில் செயல்படுத்துகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திரகுமார் கூறியதாவது: புதிய தொழில்நுட்ப விழிப்புணர்வு குறித்து அரசிடம் ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் 3500 களப்பணியாளர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு டி.ஜி.பி.எஸ்., கருவி, லேப்டாப், சாப்ட்வேர் வழங்கினால் நிலஅளவை பணிகளை விரைவாக, துல்லியமாக செயல்படுத்தலாம். இதனால் நிலஅளவைத் துறையில் குவியும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணலாம் என்றார்.