ஜூன் 2, 1943தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில், ராமசாமி - சின்னத்தாய் தம்பதியின் மகனாக, 1943ல், இதே நாளில் பிறந்தவர் இளையராஜா எனும் ராசய்யா. சிறு வயதில் அண்ணன் வரதராஜன், தம்பி கங்கை அமரனுடன் இணைந்து, 'பாவலர் பிரதர்ஸ்' இசைக்குழுவில் ஹார்மோனியம் இசைத்து, பாடினார். இசையமைப்பாளராகும் கனவுடன், சென்னை வந்தார்; தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை நுட்பங்களை கற்றார். பிரிட்டன் தலைநகர், லண்டனில் உள்ள, 'டிரினிட்டி காலேஜில்' தங்கப் பதக்கத்துடன், கிடார் இசையை கற்றார். இசைஅமைப்பாளர்கள் சலீல் சவுத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்டோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.பஞ்சு அருணாசலம் இயக்கிய அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமைப்பாளராகி, 'மச்சானை பாத்தீங்களா...' பாடலால் பிரபலமானார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை பாணி பாடல்களால் ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் செல்வாக்கு பெற்றார். பல மொழிகளில், 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும், 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்து, 'இசைஞானி'யாக வலம் வருகிறார்.இவரின், 'சிம்பொனி' இசைக்குறிப்புகள், லண்டன், 'ராயல் பிலாரமோனிக்' இசைக்குழுவால், 'வேலியன்ட்' எனும் பெயரில் இசைக்கப்பட்டு, உலகப்புகழ் பெற்றார். 'பத்ம' விருதுகளை பெற்றுள்ள இளையராஜாவின், 82வது பிறந்த தினம் இன்று!