கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து: எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும், சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தன்று, கவர்னர் மாளிகை சார்பில், தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படும். வரவேற்ற கவர்னர் நேற்று சுதந்திர தினத்தையொட்டி, தேநீர் விருந்து நடந்தது. இதில், ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம், டி.ஜி.பி. சங்கர் ஜிவால், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை, எம்.எல்.ஏ.,க்கள் பாண்டியன், மரகதம் குமரவேல்; பா.ஜ., சார்பில் மாநிலத் தலைவர் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, மாநிலச் செயலர் அஸ்வத்தமன்; த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜயபிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், வெங்கடேஷ்வரன், சதாசிவம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள், முப்படை அதிகாரிகள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவரையும் கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வரவேற்றனர். கலைநிகழ்ச்சி விழாவில், நாட்டின் சுதந்திரத்திற்காக, ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய, ஜான்சி ராணி லட்சுமிபாய், வேலுநாச்சியார் உள்ளிட்டோரை நினைவுப்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தேநீர் விருந்தில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான வி.சி., - ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் நடிகர் விஜயின் த.வெ.க. கட்சிகள் புறக்கணித்தன. முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்காத நிலையில், அதிகாரிகள் பங்கேற்றனர்.