| ADDED : பிப் 01, 2024 05:55 AM
பல்லடம் : பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துக்காக பல்லடம் அருகே 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இம்மாதம் பாதயாத்திரை நிறைவு விழாவுடன், லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை திருப்பூர் மாவட்டத்தில் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார்.இதற்காக, பல்லடம் அடுத்த மாதப்பூரில், 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, இடத்தை சீர்படுத்தும் பணி நடக்கிறது. இப்பணியில் 30க்கும் மேற்பட்ட அகழ்வு இயந்திரங்கள், லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.,வினர் கூறுகையில், ''பொதுக்கூட்டத்தில் ஐந்து லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது. பிரதமர் வருகைக்காக 'ஹெலிபேட்' அமைக்கவும் பிரத்யேக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம் திருப்பூரில் முகாமிட்டு இப்பணிகளை கண்காணித்து வருகிறார். இம்மாதம் கூட்டம் நடத்தப்படுகிறது; தேதி மட்டும் இன்னும் முடிவாகவில்லை'' என்றனர்.