மனித உயிர்களை மதிக்காத காவல்துறை: மார்க்சிஸ்ட் சண்முகம்
அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து நேற்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் பெ.சண்முகம் ஆறுதல் கூறினார். பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில் காவல் துறையினரின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில், 24 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளன. அதில், தலைமை செயலகத்திலிருந்து யாரோ ஒருவர் அழுத்தத்தில் தான், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என்று எல்லாரும் பேசுகின்றனர். யார் அந்த அதிகாரி என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகம் முழுதும் தனிப்படை கலைக்கப்படுவதாக டி.ஜி.பி., அறிவித்துள்ளார். இதன் மூலம் இதுவரை எஸ்.பி., - டி.எஸ்.பி., ஆகியோர் தனிப்படை என்ற ரவுடிக்கும்பலை வைத்து செயல்பட்டுள்ளது தெரிகிறது. மனித உரிமைகளும், மனித உயிர்களும் எல்லாவற்றையும் விட மேலானவை. அவற்றை காவு வாங்குதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரை உயர்நீதிமன்றம் தலையிட்ட பின் தான் வழக்கு வேகம் எடுத்துள்ளது. அதன்பின்னரே வழக்கை முதல்வர் ஸ்டாலின் சி.பி.ஐ.,க்கு மாற்றியுள்ளார். அஜித்குமார் குடும்பத்தினருக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.