தஞ்சாவூர்:தமிழகத்தில், வரும் 22ம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்திற்கு கர்நாடக துணை முதல்வர் வரும் போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டாவில் போராட்டம் நடத்த உள்ளதாக பா.ஜ., மாநிலப் பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில், 1,000த்துக்கும் அதிகமான கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழக முதல்வருக்கும், அவரது குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.இதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், மிகப்பெரும் போராட்டங்கள் நடத்த உள்ளோம்.டெல்டா பகுதியினர் காவிரி நீரை பெரிதும் நம்பி இருக்கின்றனர். அதனால், காவிரியின் குறுக்கே எக்காரணத்தைக் கொண்டும், அணை கட்ட விடமாட்டோம். ஆனால், 'மேகதாதுவில், அணை கட்டியே தீருவோம்' என, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உறுதியாகக் கூறி வருகிறார்.இந்நிலையில், வரும் 22ம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்தில், பங்கேற்பதற்காக தமிழகத்திற்கு கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் வருகிறார். அவர், வரும் போது, எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் மற்றும் பா.ஜ., சார்பில், டெல்டா மாவட்டங்களில், சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு, கருப்புக்கொடி போராட்டங்களை நடத்த உள்ளோம்.தமிழக அரசின் பட்ஜெட், தேர்தல் அறிக்கையை போன்று உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எப்படி ஏமாற்றப்பட்டதோ, அது போல தான் இந்த பட்ஜெட் அறிக்கையும் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.