உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீஞ்சூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

மீஞ்சூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை:மீஞ்சூர் - அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல், சிக்னல் கோளாறு போன்றவை காரணமாக, இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கத்தில், சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி ரயில் தடம் முக்கியமானதாக இருக்கிறது. இந்த தடத்தில், தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுன்றன. ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி தடத்தில், மீஞ்சூர் - அனுப்பம்பட்டு -ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாள பராமரிப்பாளர் நேற்று காலை 11:30 மணிக்கு சோதனை நடத்தினார். அப்போது, இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே, ஒரு குறிப்பிட்ட இடத்தில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். உடனே, ரயில்வே கட்டுபாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஒரு மின்சார ரயில் மற்றும் இரண்டு விரைவு ரயில்கள், பொன்னேரி ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதவிர, சில விரைவு ரயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன. பின், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தில் விரிசலை சரிசெய்தனர். இதையடுத்து, நேற்று பகல் 12:30 மணிக்கு ரயில் சேவை மீண்டும் துவங்கியது.இதற்கிடையில், மீஞ்சூர் ரயில் நிலையத்தில், மதியம் 2:15 மணி அளவில் சிக்னல் கோளாறு காரணமாக, மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு பின், ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை