பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு :ஐகோர்ட் உத்தரவு
சென்னை : 'பிச்சைக்காரர்கள், மனநலம் சரியில்லாதவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை தமிழக அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'பிச்சைக்காரர்கள், மனநலம் சரியில்லாதவர்கள் தெருக்களில் திரிகின்றனர். இவர்களுக்கு தங்குமிடம் இல்லை. இவர்களுக்கான மறுவாழ்வு நலத் திட்டங்களை அரசு அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய,'முதல் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜரானார். பிச்சைக்காரர்கள், மனநலம் சரியில்லாதவர்களுக்காக அரசு செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டங்களை பட்டியலிட்டு அரசு பிளீடர் மனு தாக்கல் செய்தார்.
மனநலம் சரியில்லாதவர்களுக்கு, பல மாவட்டங்களில் இல்லங்கள் நடந்து வருகின்றன என்றும், இந்த நிதியாண்டில் கூடுதலாக இல்லங்களை திறக்க, அரசு பரிசீலித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. உணவு, உடை, மருத்துவ வசதிகள் அளிக்கப்படுவதாகவும், பிச்சைக்காரர்களுக்கான இல்லங்களிலும் இதுபோன்ற வசதிகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. பிச்சை எடுப்பதை ஒழிக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து,'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில்,'மறுவாழ்வு திட்டங்களை அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். இதனால், பிச்சைக்காரர்கள், மனநலம் சரியில்லாதவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கும்' என கூறியுள்ளது.