சுயஉதவி குழுக்களுக்கு ரூ.28 கோடி விடுவிப்பு
சென்னை:தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செய்திக்குறிப்பு:மகளிர் சுயஉதவி குழுக்களின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பொருளாதார தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தகுதியுள்ள குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது. ஆறு மாதங்கள் நிறைவடைந்த சுயஉதவி குழுக்களின் பொருளாதார செயல்பாட்டுக்காக, ஒரு குழுவிற்கு அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சுயஉதவி குழுக்களுக்கு, சுழல் மற்றும் சமூக முதலீட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டுக்கு, 14 மாவட்டங்களில் செயல்படும், 1,209 சுய உதவி குழுக்களுக்கு, 1.81 கோடி ரூபாய் சுழல் நிதி; 17 மாவட்டங்களில், 1,731 சுயஉதவி குழுக்களுக்கு, 25.83 கோடி ரூபாய் சமூக முதலீட்டு நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. நிதி பெறும் சுயஉதவி குழுக்கள், அதை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.