உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 20 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏ.ஐ., பயன்பாடு குறித்து கருத்து கேட்பு

20 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏ.ஐ., பயன்பாடு குறித்து கருத்து கேட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒவ்வொரு தொழிலிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பது குறித்து, பல்வேறு தொழில் துறையினரிடம், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் கருத்து கேட்டு உள்ளது.அதன் அடிப்படையில், 'கூகுள்' நிறுவனத்துடன் இணைந்து, தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அமெரிக்காவில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு, கடந்த ஆகஸ்ட் இறுதியில், அந்நாட்டிற்கு சென்றது. அப்போது, கூகுள் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.இதன் வாயிலாக, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, 'நான் முதல்வன்' திட்டத்தின் வழியாக, ஏ.ஐ., தொழில்நுட்பம் தொடர்பாக, 20 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.அவற்றுடன், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, தொழில் துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் எப்படி எல்லாம் பயன்படுகிறது; பயன்பட போகிறது என்று தொழில் துறையினரிடம் கருத்து கேட்கும் கூட்டத்தை, சென்னையில் நேற்று முன்தினம் நடத்தியது.இதில், தொழில் துறை அமைச்சர் ராஜா, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் குமார் ஜெயந்த், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, கூகுள் அதிகாரிகள், பல்வேறு தொழில் துறையினர் பங்கேற்றனர்.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்காக, தமிழகத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது; ஒவ்வொரு தொழிலிலும் ஏ.ஐ., பயன்பாடு எப்படி உள்ளது என்ற விபரம் அறிய, தொழில் நிறுவனங் களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.இப்படி பலரிடமும் பேச்சு நடத்தும்போது, தொழில்நுட்பம் தொடர்பான முழு விபரம் தெரியவரும். அதற்கு ஏற்ப, தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, அமைச்சர் ராஜா அறிக்கையில், ''இதுபோன்ற நிகழ்வுகள் வாயிலாக, தொழில் துறையும் கல்வி துறையும் அரசுடன் இணைந்து செயல்படுவது வலுப்படுவதால், ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கான உலகளாவிய திறமை மையமாக தமிழகம் மாறும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை