உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய் துறை, மின் வாரியம் லஞ்சம் வாங்கியதில் டாப்

வருவாய் துறை, மின் வாரியம் லஞ்சம் வாங்கியதில் டாப்

தமிழகத்தில், 2021 முதல் 2025 மார்ச் வரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புள்ளி விபரப்படி, அரசுப்பணி செய்ய லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில், வருவாய் துறை, மின்வாரியம் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்ற வாசகத்தை, சில அதிகாரிகளின் அலுவலக மேஜைகளில் மட்டுமே காண முடிகிறது. ஆனால், அதே அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் இளநிலை உதவியாளர்கள் வரை, பதவி வித்தியாசமின்றி லஞ்சம் வாங்கி குவிக்கின்றனர். லஞ்ச பணத்தில் அதிகாரிகள் சொத்து வாங்கி குவித்தது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், லஞ்சம் வாங்குவோரை கையும், களவுமாக கைது செய்தும் வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டுகளில் லஞ்சம் வாங்கி கைதான பட்டியலில் முதல் இடத்தில் வருவாய்த்துறை உள்ளது. சர்வே துறையில், 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம், 92 பேர் இத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மின்வாரியத்தில் மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக உதவி மின்பொறியாளர் முதல் போர்மேன் வரை, 41 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உள்ளாட்சிகளில் குடிநீர் இணைப்பு, பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதாக, கிளார்க் முதல் கிராம பஞ்சாயத்து உதவியாளர் வரை, 32 பேர் கைதாகி உள்ளனர். நான்காவது இடத்தில் பத்திரப்பதிவு துறை உள்ளது. நிலமதிப்பை குறைத்து பதிவு செய்ய லஞ்சம் வாங்கியதாக சார் - பதிவாளர், உதவியாளர் என, 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில், காவல் துறையில் மூன்று பேர் மட்டுமே கைதாகி உள்ளனர். கூட்டுறவு, தொழிலாளர் நலத்துறை, உணவு வழங்கல் துறை, அறநிலையத்துறையில் தலா இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். --நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ