உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதிய உணவு திட்ட செயலி முடக்கம்; பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலக்கம்

மதிய உணவு திட்ட செயலி முடக்கம்; பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலக்கம்

சென்னை: அரசு பள்ளிகளில், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் விபரங்களை பதிவேற்றும், மொபைல் போன் செயலி இரண்டு நாட்களாக முடங்கியதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மதிய உணவு திட்டத்தின் வாயிலாக, அரசு இலவசமாக உணவு வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பள்ளியிலும், எத்தனை மாணவர்கள் பயனடைந்தனர் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க, பள்ளிக்கல்வி துறை, என்.எம்,பி., எனும் செயலியை உருவாக்கியுள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன்களில், அதை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்குள், தலைமை ஆசிரியர் அல்லது பொறுப்பு தலைமை ஆசிரியர்கள், தினமும் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களின் தகவல்களை பதிவேற்றுகின்றனர். இந்நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் இந்த செயலி முடங்கியது. அதனால், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களின் விபரங்களை, கணினி வழியாக, ஒரு மணி நேரத்துக்குள் அனுப்பும்படி, வட்டார கல்வி அலுவலர்கள் நெருக்கடி கொடுத்தனர். மேலும், அவ்வாறு தகவல்களை விரைவாக அனுப்பாத பள்ளிகளின் பெயர்களை, 'வாட்ஸாப்' குழுவில் வெளியிட்டனர். அதனால், தலைமை ஆசிரியர்கள் கலக்கமடைந்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'மதிய உணவு பற்றிய தகவல்களை சேகரித்து பதிவேற்றும் பணியை, சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கலாம். அப்படி செய்தால், நாங்கள் அன்றாட கல்வி பணியையும், பள்ளி வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவோம். இது, எங்களின் கல்வி பணிக்கு இடையூறாக உள்ளது. இதுபோன்ற தடங்கல்கள் எங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Poongodi Mano
ஆக 21, 2025 09:30

எங்கள் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் தான் மாணவர்களின் பெயரை பதிவவேற்றம் செய்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை