சட்டவிரோதமாக கட்டடம் கட்டிய டில்லி துணை சபாநாயகருக்கு கண்டனம்
புதுடில்லி : சட்டவிரோதமாக கட்டடம் கட்டிய டில்லி சட்டசபை துணை சபாநாயகருக்கு, ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லி சட்டசபை துணை சபாநாயகர் அம்ரிஷ் கவுதம். கிழக்கு டில்லியில் உள்ள கிச்ரிபூர் பகுதியில், 109 சதுர மீட்டரில் சட்டவிரோதமாக கட்டடம் கட்டியுள்ளதாக, மாநகராட்சி கவுன்சிலர் பீரித்தி பெஹான், லோக்அயுக்தாவில் முறையிட்டார். துணை சபாநாயகர் என்ற முறையில் தனக்கு இந்த வழக்கிலிருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டும் என, அம்ரிஷ் கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை லோக்அயுக்தா, கடந்த மே மாதம் நிராகரித்து விட்டது. இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
நீதிபதி ஹிமா கோலி இந்த வழக்கை விசாரித்தார். சட்ட விரோதமாக கட்டடம் கட்டப்பட்டதை அம்ரிஷ், தனது வழக்கறிஞர் மூலம் ஒப்புக்கொண்டார். சட்டவிரோதம் என தெரிந்தும் கட்டடம் கட்டியுள்ளீர்கள். கோர்ட் உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டாம். நீங்களாக இடிக்காவிட்டால், சட்டவிரோத கட்டடத்தை இடிக்க கோர்ட் உத்தரவிட வேண்டிவரும். எனவே, இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்பதை, வரும் 22ம்தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.