உருவானது காற்றழுத்தம்: தமிழகத்திற்கு இன்று மிதமான மழை உண்டு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை உருவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இது, மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதிகளில், நேற்று காலை நிலவரப்படி, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மர் மற்றும் வங்கதேச கடலோர பகுதிகளை ஒட்டி செல்லும். தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். தமிழகம், புதுச்சேரியில் வரும், 8ம் தேதி வரை லேசான மழை தொடர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதியில், இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.