உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தை - மகன் மோதலுக்கு காரணம் மகள்!

தந்தை - மகன் மோதலுக்கு காரணம் மகள்!

குடும்பத்திலிருந்து தன்னை தவிர யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் என அன்புமணி பிடிவாதம் பிடிப்பதும், மகள்களின் பாசத்திற்கு ராமதாஸ் கட்டுப்படுவதும் தான், இருவருக்கும் இடையேயான மோதலுக்கு காரணம் என, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.பா.ம.க., இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி, 2022 மே 28ம் தேதி கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவரானதும் பேசிய அன்புமணி, 'தமிழக அரசியலில் பா.ம.க.,வை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, 'பா.ம.க., - 2.0' என்ற திட்டத்தைச் செயல்படுத்துவேன்' என்றார். மாவட்ட அளவில் சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். ஆனால், கட்சித் தலைவராகி இரண்டரை ஆண்டுகளாகியும், ராமதாசிடம் இருந்து எந்த அதிகாரமும் அன்புமணிக்கு வரவில்லை. மகன் தலைவரான பின்னும், ராமதாஸ் வழக்கம்போல திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து கட்சியை நடத்தி வருகிறார். ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை கூட அவரே நியமனம் செய்கிறார். இதனால், தந்தை மீது அன்பு மணி கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று நடந்த பா.ம.க., பொதுக் குழுவில், தன் மூத்த மகளின் மகன் முகுந்தனை, இளைஞர் சங்க தலைவ ராக ராமதாஸ் நியமித்தார். இது, அன்புமணியை அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால், மேடையிலேயே இருவருக்கும் சொற்போர் நடந்தது.இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த 2022 மே 28ல் அன்புமணி தலைவரான அதே மேடையில், ஜி.கே.மணியை கவுரவ தலைவராக ராமதாஸ் நியமித்தார். தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அறிவித்ததால், அன்புமணி கடும் அதிருப்தி அடைந்தார். அந்த அதிர்ச்சி விலகுவதற்குள், ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை, பா.ம.க., இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமித்தார். இனி இப்படியே விடக்கூடாது என, தந்தையிடம் நேரடியாக வாக்குவாதம் செய்து, தமிழ்க்குமரனை அப்பதவியில் இருந்த விலகச் செய்தார்.கடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரியில் மனைவி சவுமியாவை போட்டியிட வைக்க, அன்புமணி நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ராமதாசை பொறுத்தவரை மகனுக்கு மட்டுமல்ல; இரு மகள்களின் குடும்பத்திலிருந்தும் தலா ஒருவருக்கு, கட்சியில் பதவி கொடுக்க நினைக்கிறார். ஆனால், குடும்பத்திலிருந்து தன்னை தவிர யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் என்பது அன்புமணியின் பிடிவாதம். மகள்களின் பாசத்திற்கு ராமதாஸ் கட்டுப்படுவது, அன்புமணிக்கு சிக்கலாக இருக்கிறது. இது தான் தந்தை -- மகன் மோதலுக்கு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுவரை நான்கு சுவர்களுக்குள் நடந்து வந்த ராமதாஸ் -- அன்புமணி மோதல், இப்போது பொதுக்குழு மேடையில் வெடித்திருப்பதும், பொதுக்குழு அரங்கிலேயே நிர்வாகிகள், இரு பிரிவாகப் பிரிந்து கோஷமிட்டதும், பா.ம.க., நிர்வாகிகள், தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ