மனநோயில் இருந்து கவர்னர் விடுபடவேண்டும்
தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிக்கை:காந்தி மண்டபத்தில், அவரது நினைவு நிகழ்வை நடத்தாமல், அருங்காட்சியகத்தில் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதாவது அர்த்தமுள்ளதா என, கவர்னர் ரவி கேள்வி எழுப்பி இருக்கிறார். பாரம்பரியமாக காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்புகள், மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் நடத்தப்பட்டன. அங்கு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடப்பதால், 2022ம் ஆண்டு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள், காந்தியின் புதிய சிலை நிறுவப்பட்டது. அன்று முதல் அவரது பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின நிகழ்வுகள் அங்கு நடக்கின்றன. முந்தைய ஆண்டுகளில், எழும்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் கவர்னர் ரவி பங்கேற்றார். கவர்னர் குறிப்பிடுவது போல், அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நிகழ்ச்சி நடக்கவில்லை. முதல்வர் அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும். அதன் பின்னனியில் பாந்தியன் சாலை, மேம்பாலம் இருக்கும்.ஆனால், கவர்னர் கண்களுக்கு வெறும் அவதுாறுதான் தெரியும். காந்தி தனது வாழ்நாளில், திராவிட சிந்தத்தாந்தை பின்பற்றுபவர்களால், கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். இன்றும் அவர் கேலி செய்யப்பட வேண்டுமா என்றும் கவர்னர் கேட்டுள்ளார்.அண்ணாதுரை வழியில் வந்த நாங்கள், தேசத்தையும், தேசப் பிதாவையும் நேசிப்பவர்கள்; அவரை கொன்றவர்களை கொண்டாடுகிறவர்கள் அல்ல. மத வெறிக்காக காந்தியை கொன்றவர்கள், இன்று ரத்த பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை எதிர்த்து, கவர்னர் குறிப்பிடும் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுவோர்தான் களமாடி கொண்டிருக்கின்றனர்.காந்தி கொலைக்கு பின்னால் இருந்தவர்களையும், அமைப்பையும் ஆதரிப்பவர்களின் நோக்கங்களை, தமிழக மக்கள் நன்கு அறிவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட, கவர்னர் முக்கியமானவர் அல்ல. மன்னராக, ஜமீன்தாராக நினைத்துக் கொண்டு அதிகாரம் செய்யும் மன நோயில் இருந்து, கவர்னர் விடுபட வேண்டும். இந்த பிரச்னையை அரசியலாக்குவதை தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில், கவர்னர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.