உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிரானது; சுட்டிக்காட்டும் அன்புமணி

இது தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிரானது; சுட்டிக்காட்டும் அன்புமணி

சென்னை: 'குரூப் டி பணியிடங்களுக்கு நிரந்தர நியமனங்களை ரத்து செய்யும் முடிவால், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது' என்று பா.ம.க.,வின் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அவரது அறிக்கை; தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள். மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி, அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66ம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajarajan
ஏப் 22, 2025 19:02

தாராளமா ரத்து செய்யச்சொல்லுங்க. ஆனால், அவர்களுக்கான சம்பள / சலுகை செலவை நீங்க ஏத்துக்கோங்க. பொதுமக்கள், எங்கள் தலையில காட்டாதீங்க. தனியார் நிறுவனத்தில், நியமன நிர்வாகி முதல் அனைவரும் நிரந்தரமற்றவர்களே. அவர்கள் வாழவில்லை ?? குடும்பம் நடத்தவில்லை ?? மேற்கொண்டு திறனை வளர்க்கவில்லை ?? மேற்கொண்டு கல்வித்தகுதியை உயர்திக்கொள்வதில்லை ?? வருமானத்திற்கேற்ற செலவு செய்வதில்லை ?? வாரிசுகளை உயர்த்தவில்லை ?? எதிர்காலத்திற்கு சேமிக்கவில்லை ?? அரசுக்கு இவர்கள் வரி செலுத்தவில்லை ?? விலை உயர்வை தாங்கவில்லை ?? பின்னர், எதற்கு அரசு ஊழியருக்கு மட்டும் இவ்ளோ வக்காலத்து ?? பொது விவாதத்துக்கு வாங்க. நாங்க பதில் சொல்றோம்.


Oviya Vijay
ஏப் 22, 2025 13:47

இதுதாண்டா திமுக...இதுதாண்டா திமுக...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 22, 2025 13:39

மோடி அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார் மயம் ஆக்கி விட்டார் என்று பொங்கிய மங்குனி தற்குறிகள்.. க்ருப் டி பிரிவினர் கள் இனி நிரந்தரமோ அல்லது புதிதாக தேர்ந்தெடுக்க போவதில்லை அனைத்தும் அவுட் சோர்ஸ்ஸிங் அல்லது கான்ட்டிராக்டாக தான் ஒப்பந்தம் போடுவோம் என்கிறது இந்த விடியாத திமுக அரசு.. இத்தனை நாள் இழுத்தடித்த செவிலியர்கள் பணி நிரந்தரம் உயர்நீதி மன்றம் இடித்த பிறகு இப்பொழுது பணி நிரந்தர ஆணையை வழங்கி இருக்கிறது.. இதுக்கு அந்த தற்குறிகள் என்ன சொல்ல போகிறார்கள்!


முக்கிய வீடியோ